செந்தில் பாலாஜி கூட்டாளி ரத்தீஷ் எங்கே? தேடுகிறது லஞ்ச ஒழிப்பு போலீஸ்
செந்தில் பாலாஜி கூட்டாளி ரத்தீஷ் எங்கே? தேடுகிறது லஞ்ச ஒழிப்பு போலீஸ்
ADDED : ஆக 11, 2026 06:31 PM

சென்னை: 'டாஸ்மாக்' ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ரத்தீஷ், 35, வெளிநாட்டிற்கு தப்பி விட்டாரா என்பது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த திமுக ஆட்சியில், டாஸ்மாக் நிறுவனத்தில், மது கொள்முதல், விற்பனை, சரக்கு போக்குவரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சில தினங்களுக்கு முன், 45 இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதற்கான ஆதாரங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்தபோது, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த ரத்தீஷ் என்பவரும் ஊழலுக்கு சூத்திரதாரிகளாக செயல்பட்டது தெரியவந்தது.
இவர்களுக்கு, ஐஏஎஸ் அதிகாரி விசாகனும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த ஊழல் வழக்கில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 பேர் சிக்கி உள்ளனர். இவர்களில் ரத்தீஷ் தலைமறைவாக உள்ளார்.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:
கடந்த, திமுக ஆட்சியில் ரத்தீஷ் தான், 'டாஸ்மாக்'கின் அதிகார மையமாக செயல்பட்டு வந்துள்ளார். இவரது உத்தரவுகளின்படி தான், அவருக்கு வேண்டிய நபர்களின் ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதனால், ரத்தீஷ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அவர், கடல் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாக தகவல்கள் வருகின்றன. அதன் அடிப்படையில், விசாரணை நடத்துகிறோம். ஊழல் வழக்கில் இருந்து, அவர் தப்பிக்கவே முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
