மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: 16 மொழிகளில் சுய விபரங்களை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: 16 மொழிகளில் சுய விபரங்களை 'ஆன்லைனில்' பதிவு செய்யலாம்
ADDED : மே 19, 2026 03:13 AM

சென்னை:''மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, ஜூலை 17 முதல் சுயவிபரங்கள் சமர்ப்பிக்கும் முறை தொடங்க உள்ளது. பொது மக்கள், 16 மொழிகளில், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தங்களின் விபரங்களை சமர்ப்பிக்கலாம்,'' என, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.
நாட்டில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2011ல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடந்தன.
அதன்பின், 2021ல், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கணக்கெடுப்பு பணிகள் தடைபட்டன. இந்த சூழலில், 2027ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. இந்த கணக்கெடுப்பு பணிகள், வீட்டு கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதன்மை பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரியில், நேற்று நடந்தது. பயிற்சி முகாமை, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ்பாபு தொடங்கி வைத்தார். பயிற்சி முகாம், வரும் 21ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர், சுந்தரேஷ் பாபு கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின், முதல்கட்டமாக, வீடுகள் கணக்கெடுப்பு பணிகள், வரும் ஆக., 1 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.
அதற்கு முன், ஜூலை 17ம் தேதி முதல், 31ம் தேதி வரை, பொது மக்கள் அனைவரும், 'ஆன்லைன்' வழியே சுய விபரங்களை பதிவு செய்யலாம். இந்த வீடுகள் கணக்கெடுப்பு பணியின்போது, மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.
பொது மக்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உட்பட 16 மொழிகளில், தங்களுக்கு விருப்பமான மொழிகளில், சுய விபரங்களை பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுய விபரங்களை பதிவு செய்யும்போது, முதலில் பதிவு செய்யும் மொழி; குடும்பத் தலைவரின் பெயர்; தொலைபேசி எண்; ஆகிய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு முறை பதிவு செய்த பின், அவற்றை மாற்ற இயலாது. சேகரிக்கப்படும் தனிமனித விபரங்கள், முறையாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
