ஆயுத தாக்குதல் ரேடாரை பயன்படுத்தி ஜப்பான் விமானங்களை அச்சுறுத்திய சீனா
ஆயுத தாக்குதல் ரேடாரை பயன்படுத்தி ஜப்பான் விமானங்களை அச்சுறுத்திய சீனா
ADDED : டிச 08, 2025 06:45 AM

டோக்கியோ: ஜப்பான் போர் விமானங்கள் மீது, எப்.சி.ஆர்., எனப்படும் ஆயுத கட்டுப்பாடு ரேடாரை பயன்படுத்தி சீனா அச்சுறுத்தியதாக அந்நாடு குற்றஞ்சாட்டி உள்ளது.
நம் அண்டை நாடான சீனா, அதன் அருகே உள்ள தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது.
ஆனால், இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது.
'தைவான் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்' என, அந்நாட்டின் பிரதமர் சனாய் தகாய்ச்சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நீடிக்கிறது.
ஜப்பானின் ஓகினாவா தீவுகளுக்கு அருகே உள்ள சர்வதேச வான்வெளி பகுதியில் நடந்த இரு வேறு சம்பவங்களில், அந்நாட்டின், 'எப் - 15' ரக போர் விமானங்கள் மீது, சீனாவின் லியாவோனிங் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட, 'ஜே - 15' ரக போர் விமானங்கள் ஆயுத கட்டுப்பாடு ரேடாரை இயக்கியதாக ஜப்பான் குற்றஞ்சாட்டி உள்ளது.
இச்சம்பவத்துக்கு, ஜப்பான் ராணுவ அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸூமி கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பாக சீனா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

