UPDATED : மே 24, 2026 08:07 PM
ADDED : மே 24, 2026 04:10 AM

கோவை: தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலர் மீனா, அக்கட்சியிலிருந்து விலகினார்.
தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலராக இருந்தவர் மீனா; இவரது கணவர் ஜெயக்குமார். மருதமலை கோவில் தக்கார். முன்னாள் அமைச்சர் வேலு ஆதரவாளர்.
லால்குடியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டினை, அவரது வீட்டுக்குச் சென்று மீனா வாழ்த்தினார்.
அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சித்தனர்.
மன உளைச்சலுக்கு ஆளான மீனா ஜெயக்குமார், வெளியிட்ட வீடியோ:
நானும், லீமா ரோஸ் மார்ட்டினும், 20 ஆண்டுகளாக குடும்ப நண்பர்கள். ஒரு நிமிடத்தில் துாக்கி வீசிட்டு போற நட்பு எங்களுடையது அல்ல. நான் கட்சி மாறவில்லை.
நீங்கள் பேசிய பின், இதுவும் நல்லா இருக்கேன்னு தோணுது. கட்சியில் இருந்து ஒவ்வொருத்தரா அனுப்புறது தலைவர் இல்லை; உங்களை மாதிரியான ஆட்கள் தான். தி.மு.க., ஏன் இப்படியாகி விட்டது என்று தெரியுமா. சமூக வலைதளத்தில் இப்படியெல்லாம் பேசி பரப்பிட்டு இருக்கீங்களே... உங்களால் தான். எனக்கென திறமை இருக்கிறது. ஒரு சக்தி இருக்கிறது; அந்த சக்தி சும்மா விடாது.
இவ்வாறு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியில் இருந்தும் விலகுவதாக மீனா அறிவித்து உள்ளார். இவர், கோவை சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் பங்கேற்றார்.
அவருக்கு வாய்ப்பு வழங்காமல், காங்கிரசுக்கு தொகுதி தரப்பட்டது. 2022ல் உள்ளாட்சி தேர்தல் நடந்த போது, மேயராக விரும்பி வாய்ப்பு கேட்டார். அப்போதும் உட்கட்சி அரசியலால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
