ADDED : ஜூலை 19, 2026 01:53 AM

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. இதில், தமிழக அரசியல் நிலை பார்லி.,யில் பிரதிபலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தி.மு.க., - எம்.பி.,க்கள் குறைந்தபட்சம் மூன்று பேராவது, இரு சபைகளிலும் அலுவல்கள் நடக்கும் போது இருக்க வேண்டும் என, கட்சி உத்தரவிட்டு உள்ளதாம்.
லோக்சபாவில், தி.மு.க.,வுக்கு எதிராக காங்., ஏதாவது பிரச்னையை எழுப்பினால், உடனடியாக தி.மு.க., - எம்.பி.,க்கள் பதிலடி கொடுக்க தயாராக உள்ளனர். அதே போல ராஜ்யசபாவிலும் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தயாராக உள்ளன.
த.வெ.க.,வுக்கு பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஒரு எம்.பி., கூட கிடையாது. இதனால் அக்கட்சிக்கு ஆதரவாக காங்., செயல்பட உள்ளது. ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை, தமிழக பிரச்னைகளை எழுப்ப, 10க்கும் மேற்பட்ட நோட்டீஸ் கொடுத்துள்ளார். தி.மு.க., இதற்கு பக்கபலமாக இருக்கும்.
த.வெ.க., ஆதரவில் ராஜ்யசபாவில் காங்., - எம்.பி., பதவி பெற்றவர் பிரவீன் சக்கரவர்த்தி. முதல்வர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். த.வெ.க.,வின் கேடயமாக, அங்கு அவர் செயல்பட உள்ளார். சிதம்பரம் தி.மு.க., ஆதரவாளர். எனவே, தி.மு.க.,வுக்கு எதிராக பிரவீன் சக்கரவர்த்தி களமிறங்கப் போகிறார். 'ஆகஸ்டில் தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு பெரிய அணுகுண்டை பார்லி.,யில் வீசப்போகிறேன்' என, சொல்லி வருகிறார் பிரவீன். இது தி.மு.க.,வினரை கலங்கடித்து வருகிறது.
