காங்கிரஸ் தோல்விக்கு காரணம் அதன் தலைமை தான்: பார்லியில் அமித்ஷா பேச்சு
காங்கிரஸ் தோல்விக்கு காரணம் அதன் தலைமை தான்: பார்லியில் அமித்ஷா பேச்சு
UPDATED : டிச 10, 2025 10:49 PM
ADDED : டிச 10, 2025 06:33 PM

புதுடில்லி: '' காங்கிரஸ் தோல்வியடைவதற்கு வாக்காளர் பட்டியலோ மின்னணு ஓட்டு இயந்திரமோ காரணம் அல்ல. அந்த கட்சியின் தலைமைதான் காரணம்,'' என லோக்சபாவில் அமித்ஷா பேசினார்.
தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேர்தல் சீர்திருத்தம் குறித்து இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை என்ற தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின. விவாதத்துக்கு பார்லிமென்ட் உயர்ந்த இடம் என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். பாஜ - தேஜ கூட்டணி விவாதத்தில் இருந்து விலகி ஓடியதில்லை. எந்த விவகாரம் குறித்தும் பார்லிமென்ட் விதிமுறைகளின்படி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.
பாதுகாப்பாக இருக்குமா
எஸ்ஐஆர் குறித்து இந்த அவையில் விவாதிக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். எஸ்ஐஆர் என்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பு. தேர்தல் கமிஷனும், தலைமைத் தேர்தல் கமிஷனரும் அரசின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தி கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதில் அளிப்பார்கள்? கடந்த நான்கு மாதங்களாக எஸ்ஐஆர் குறித்து பொய்கள் பரப்பப்பட்டன. நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டன.
கடந்த நவ.,05 ல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஹைட்ரஜன் குண்டை செயலிழக்க செய்தார். ஹரியானாவில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். அதற்கு தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்திவிட்டது. அந்த வீடோ, அல்லது வாக்காளர்களோ போலி கிடையாது.
வரலாறு
காலத்திற்கு ஏற்ப வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். இதற்காகவே 2025ல் எஸ்ஐஆர் பணியை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. இறந்தவர்கள், வெளிநாட்டவர்களின் பெயரை நீக்கவே எஸ்ஐஆர் நடக்கிறது.
எஸ்ஐஆர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். முதல் எஸ்ஐஆர் பணிகள் 1952ல் நடந்தன. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு பிரதமராக இருந்தார். இரண்டாவது எஸ்ஐஆர் 1957ல் நடந்தது. அப்போதும் நேரு பிரதமராக இருந்தார். மூன்றாவது முறையாக நேரு பிரதமராக இருந்த போது 1962ல் நடந்தது.1965 -66 ல் பெரியளவில் எஸ்ஐஆர் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார்.
அடுத்ததாக இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போதும், பிறகு பாஜவின் வாஜ்பாய், காங்கிரசின் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்தபோதும் எஸ்ஐஆர் நடந்தது. அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதற்கு இது தேவைப்பட்டது. வாக்காளர் பட்டியல் மோசடியாக இருந்தால் எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும்?
இரட்டை வேடம்
ராஜஸ்தான், சத்தீஸ்கர், தமிழகத்தில் பாஜ தோல்வியை சந்தித்துள்ளது. அப்போது தேர்தல் சிறந்தது என்றனர். நாங்கள் வெற்ற பெற்ற போது தேர்தல் மோசடி என்கின்றனர்.நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் கமிஷன் சிறந்தது என்கின்றனர். தோற்கும்போது தேர்தல் கமிஷனை குறை சொல்கிறீர்கள். இது போன்ற இரட்டை வேடம் இனிமேல் பொருந்தாது.
தோல்விக்கு காரணம்
வாக்காளர் பட்டியல் புதிதோ அல்லது பழையதோ காங்கிரஸ் தோற்பது நிச்சயம். பாஜ வெற்றி பெற்றதை விட தோல்வியை சந்தித்துள்ளது. அப்போது நாங்கள் தேர்தல் கமிஷனை கேள்வி கேட்டது இல்லை. எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனின் பிம்பத்தை கெடுத்து விட்டன. வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்றால், நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?
காங்கிரஸ் தோல்வியடைவதற்கு வாக்காளர் பட்டியலோ மின்னணு ஓட்டு இயந்திரமோ காரணம் அல்ல. உங்களின் தலைமைதான் காரணம். காங்கிரஸ் தோற்கும் பாரம்பரியம் 2014 ல் துவங்கியது.
ஆனால், அக்கட்சி 1989ல் ராஜிவ் கொண்டு வந்த மின்னணு ஓட்டு இயந்திரம் மீது குறை சொல்கிறது. மின்னணு ஓட்டு இயந்திரம் முதல் முறை பயன்படுத்தப்பட்ட 2004 மற்றும் 2009ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இரண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 தோல்விக்கு பிறகு குறை சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஓட்டுப்பெட்டிகளை கைப்பற்ற முடியாது. முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.
பிரதமரின் சுற்று பயணத்துக்கும், தேர்தல் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எப்போதும் மக்கள் மத்தியில் இருக்கிறார். தேர்தல் சீர்திருத்தம் குறித்து 2014 முதல் காங்கிரஸ் எந்த ஆலோசனையும் வழங்கியதில்லை. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
ராகுல் குறுக்கீடு
இதற்கு பதிலளித்த அமித்ஷா, ''அவையில் நான் என்ன பேச வேண்டும் என்பதை ராகுல் முடிவு செய்ய முடியாது. அவர் பொறுமையாக இருக்க வேண்டும். ஹரியானாவில் உள்ள முகவரி பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. அங்கு பல குடும்பங்கள் வசிக்கின்றனர். கர்நாடகா, தெலுங்கானா, ஹிமாச்சலில் வெற்றி பெற்ற போது வாக்காளர் பட்டியலை குறை சொல்லவில்லை. தேஜஸ்வி யாதவ், பிரசாந்த் கிஷோரிடம் இரண்டு வாக்காளர் அட்டைகள் இருந்தன.
நேரு, இந்திரா, சோனியா ஆகியோர் லோக்சபாவில் பேசி இருக்கிறார்கள் அதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்; ஆனால் ராகுல் போன்று விவாதத்திற்கு பயந்து ஓடக்கூடியவர்கள் யாரும் இல்லை'' என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
சோனியா குறித்து அமித்ஷா குறிப்பிட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் போட்டனர். இதன் பிறகு அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

