360 கிலோ வெடிமருந்து, துப்பாக்கி பறிமுதல்; காஷ்மீர் டாக்டர்கள் இருவர் கைது: பயங்கர சதி முறியடிப்பு
360 கிலோ வெடிமருந்து, துப்பாக்கி பறிமுதல்; காஷ்மீர் டாக்டர்கள் இருவர் கைது: பயங்கர சதி முறியடிப்பு
UPDATED : நவ 10, 2025 12:26 PM
ADDED : நவ 10, 2025 11:49 AM

பரிதாபாத்: ஹரியானாவில் 360 கிலோ வெடி மருந்துகள் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்த ஜம்மு காஷ்மீர் போலீசார், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் டாக்டர்கள் இருவரை கைது செய்துள்ளனர். இதன் மூலம், பயங்கர சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து வேட்டையாடும் பணியில் இந்திய ராணுவத்தினரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கடந்த அக்.,27ம் தேதி ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹாரன்பூரில் அடில் அகமது ராதர் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளான்.
அவன் பணியாற்றிய இடத்தில் சோதனை செய்த போது, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் வெளியாகின.அந்த தகவலின் பேரில், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மற்றொரு டாக்டரான முஜாமில் ஷகீல் என்பவன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, 360 கிலோ வெடிமருந்துகள், டைமர்கள் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஷகீல் டாக்டராக வேலை செய்து வந்துள்ளான். இதையடுத்து, முஜாமில் ஷகீலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதன் மூலம், பயங்கரவாத தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. கைதான நபர்களின் பின்னணி, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பரிதாபாத் போலீஸ் கமிஷனர் சதேந்தர் குமார் கூறியதாவது; துப்பாக்கிகள், தோட்டாக்கள், 360 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது அமோனியம் நைட்ரேட் என்று கண்டறியப்பட்டுள்ளது. வெடிகுண்டு தயாரிப்புக்கான உலோகப்பொருட்கள், பேட்டரிகளுடன் கூடிய 20 டைமர்கள், 24 ரிமோட்கள், வாக்கி டாக்கிகள், மின் வயரிங், பேட்டரிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

