19 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி; போலீசாரிடம் சிக்க வைத்தது ஏஐ!
19 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி; போலீசாரிடம் சிக்க வைத்தது ஏஐ!
ADDED : செப் 20, 2026 08:54 AM

சென்னை: கொலை வழக்கு ஒன்றில் ஜாமினில் வெளிவந்த பிறகு, 2007ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த 39 வயதுடைய குற்றவாளி ஷேக் அப்துல்லாவை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்ய போலீசாருக்கு ஏஐ தொழில்நுட்பம் உதவியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில், 2007ம் ஆண்டு யாதவர் சங்க தலைவர் பாண்டியமணி என்பவரை கொலை செய்த வழக்கில், ஷேக் அப்துல்லா என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்தவர், பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்து வந்துள்ளார். அப்துல்லாவை பிடிக்க பொன்னேரி நீதிமன்றம், 2010ம் ஆண்டு, பிடிவாரன்ட் பிறப்பித்தது.
தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், குற்றவாளியை தேடிவந்தனர். மேலும் அப்துல்லா கைது செய்யப்பட்ட போது எடுத்த படத்தை, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன், தற்போதைய அவரது தோற்றத்தை படமாக வடிவமைத்து வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விசாரித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன், சூளைமேடு அருகே ஷேக் அப்துல்லாவை போலீசார் பிடித்துள்ளனர். ஜாமினில் வெளிவந்த அவர் அடிக்கடி இடங்களை மாற்றி வசித்துள்ளார். தற்போது திருமணம் செய்து திருமுல்லைவாயலில் வசித்து வந்துள்ளார். தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். விசாரணைக்கு பின், ஷேக் அப்துல்லா, திருவொற்றியூர் காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர்.
பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2007ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த 39 வயதுடைய குற்றவாளி ஷேக் அப்துல்லாவை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்ய போலீசாருக்கு ஏஐ தொழில்நுட்பம் உதவியுள்ளது. 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் போலீசாரிடம் இருந்தது.
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எப்படித் தோற்றமளிப்பார் என்பதைக் காட்டும் படங்களை போலீசார் உருவாக்கினர். சமூக ஊடகத் தளங்களில் தேடுவதற்கு இந்தப் படங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் வாயிலாக அப்துல்லாவுடையது என்று சந்தேகிக்கப்படும் பேஸ்புக் கணக்கை போலீசார் கண்டறிந்து கண்காணித்தனர்.
முதலில் அவர் சூளைமேட்டில் இருப்பது தெரியவந்தது. அப்துல்லா அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றிக கொண்டு வந்துள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், அவருக்குத் திருமணமாகிவிட்டதாகவும் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். பிறகு ஏஐ தொழில்நுட்பம் உதவியால் ஒரு வழியாக திருமுல்லைவாயல் பகுதியில் ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
