UPDATED : ஆக 01, 2026 07:42 AM
ADDED : ஆக 01, 2026 05:33 AM

- நமது நிருபர் -
தி.மு.க.,வில், 12 ஆண்டுகளுக்கு பின், ஓட்டுப்பெட்டி வாயிலாக, உட்கட்சி தேர்தலை நடத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சியின் அமைப்புகளை முழுமையாக, மறுசீரமைக்கும் நோக்கில், 10 பேர் கொண்ட குழுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நியமித்தார். இக்குழுவினர், தங்களின் பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தி.மு.க.,வில், கிளை முதல் தலைமை நிலையம் வரை முழு அமைப்பையும் சீரமைக்க வேண்டும். மாவட்டங்களை பிரித்து, எல்லை மற்றும் நிர்வாக அமைப்பை மறுவரையறை செய்ய வேண்டும். இளைஞரணி, மகளிரணி என, அனைத்து சார்பு அணிகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
தேர்தல் பணிக்குழுக்களை புதுப்பித்து, நிரந்தர தேர்தல் மேலாண்மை அமைப்பை உருவாக்க வேண்டும். அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, உயர்நிலை செயல் திட்ட சிந்தனை குழு அமைக்க வேண்டும்.
மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு பின், கட்சியின் அனைத்து நிலைகளிலும் நிர்வாகிகளை தேர்வு செய்ய, உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
போட்டி இருக்கும் இடங்களில் ஓட்டுப்பெட்டி வைத்து, உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். நியமன முறையை கைவிட்டு, தொண்டர்களின் ஓட்டுகள் வாயிலாக நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தி.மு.க.,வில் உட்கட்சி தேர்தலை நடத்த ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, கடந்த 2014க்கு பின், ஓட்டுப் பெட்டி வாயிலாக, உட்கட்சி தேர்தல் நடக்கவுள்ளது.
