தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/(எரி)வாயு பிரச்னையை கிளப்பும் தி.மு.க.,

(எரி)வாயு பிரச்னையை கிளப்பும் தி.மு.க.,

(எரி)வாயு பிரச்னையை கிளப்பும் தி.மு.க.,


UPDATED : மார் 27, 2026 10:37 PM

ADDED : மார் 27, 2026 12:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 10:37 PM ADDED : மார் 27, 2026 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்


இந்த மாதம் பாதி கடக்கும் வரை கூட, சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., வசம் தகுந்த பேசுபொருளே இல்லாமல் இருந்தது. அதாவது, யாரை வில்லனாக்குவது என்று தெரியவில்லை. யாரையாவது அல்லது எதையாவது வில்லனாக்கி உணர்ச்சிப்பூர்வமாக திசை திருப்புவது தான் தி.மு.க.,வின் வழக்கமான பாணி. பல பிரச்னைகளில் இருந்து திசை திருப்ப, இப்போது கட்டாயம் வேறு!

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் போதை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவை தான் எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள ஆயுதங்கள். இவற்றை பற்றி பேசுவதை மக்களும் வரவேற்கின்றனர். இவற்றில் இருந்து மக்களை திசை திருப்ப வேண்டுமே, எதுவும் சிக்கவில்லையே என்ற டென்ஷனில் இருந்த தி.மு.க.,விற்கு இப்போது லட்டு போல் ஒரு விஷயம் கிடைத்துள்ளது.

அட்சய பாத்திரம்


கடந்த 2019, 2021, 2024 தேர்தல்களில், பா.ஜ., பாசிச ஹிந்துத்துவ சக்தி என்றும், அது மாநில நலன்களை நசுக்கப் பிறந்தது என்றும் தி.மு .க., பிரசாரம் செய்தது. பா.ஜ.,வின் முகமான பிரதமர் மோடியையும் விட்டுவைக்கவில்லை. இந்த பிரசாரம் தி.மு.க.,வுக்கு ஓட்டுகளை அள்ளித்தரும் அட்சயப் பாத்திரமாக அமைந்தது.

ஆனால், கடந்த மே மாதம் நடந்த 'ஆப்பரேஷன் ஸிந்துார்' நடவடிக்கைக்கு பின் நிலை மாறிவிட்டது. என்ன தான் 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க., சூளுரைத்தாலும், மக்கள் மத்தியில் வீரியமான வரவேற்பு இல்லை. இது போன்ற மாற்றங்களை கண்டுகொள்வதில் தி.மு.க.,வினர் தேர்ந்தவர்கள். அதனால் தான் கடந்த ஓராண்டாகவே, சம்பிரதாய அளவில் மட்டும், 'நிதி தரவில்லை' என மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய் கூட, முதலில், தி.மு.க., ஊழல்களோடு பா. ஜ.,வை கொள்கை எதிரி என பிரசாரம் செய்து வந்தார். ஆனால், மோடி எதிர்ப்புக்கு மக்களிடம் பேராதரவு இல்லை என்று அவரது ஆலோசகர்கள் கூறவே, பா.ஜ., விமர்சனத்தை நிறுத்திவிட்டார்.

ஈரான் - அமெரிக்கா போர்


இந்த சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இன்று இல்லை. பழைய பகை என்பது எங்கும் காணக் கிடைக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை விமர்சித்தால் ஓட்டு விழும் என்பதும் இல்லை. இலவசங்கள் எல்லாம் முடிந்த அளவு கொடுத்தாகிவிட்டது. இப்படிப்பட்ட பேசுபொருள் இல்லாத நிலையில் தான் தி.மு.க.,விற்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது சமையல் காஸ் தட்டுப்பாடு.

ஈரான் -அமெரிக்கா போரால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர முடியாமல், கச்சா எண்ணெய் கப்பல்களும் இயற்கை எரிவாயு கப்பல்களும் சிக்கியுள்ளன. இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக சிலிண்டர், கிடைப்பது குதிரைக்கொம்பாகி உள்ளது. 21 நாளில் கிடைத்துவந்த வீட்டு உபயோக சிலிண்டர் தற்போது கிடைப்பதற்கு 30- - 35 நாட்களாகிறது.

இது தற்காலிகமான பிரச்னை தான் என, மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தினமும் விளக்கம் அளித்து வருகின்றன. ஆனால், இந்த பிரச்னை எப்போது தீரும் என யாராலும் தெளிவாக சொல்ல முடியவில்லை. காரணம் ஈரான்- - அமெரிக்கா போரில் நிறுத்தமோ திருப்பமோ வந்தால் தான் தீர்வு கிடைக்கும்.

மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயம், தீர்வு எப்போது என்று தெரியாத விஷயம் என்பதால், மிக சாதுர்யமாக, இதை தேர்தல் பேசுபொருளாக மாற்ற தி.மு.க., முயற்சித்து வருகிறது. தற்காலிகமான பிரச்னை என்றாலும் தேர்தல் நடக்கும் வரையாவது நீடிக்கும் என்பது தி.மு.க., வின் கணக்கு. அதனால், சர்வதேச பிரச்னையை, மத்திய அரசிற்கு எதிரான பிரச்னையாக மாற்றி வருகிறது.

தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, தமிழகம் முழுதும், மத்திய அரசுக்கு எதிராக, காஸ் தட்டுப்பாடை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அப்போது, தமது எக்ஸ் வலைப்பதிவில் ஸ்டாலின்:

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ., அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலை நோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

நாடு முழுதும் உள்ள 'இண்டி' கூட்டணி கட்சிகள் இதை பிடித்துக்கொள்ளவே, அனைத்து இடங்களிலும் காஸ் தட்டுப்பாடு பற்றிய வதந்திகள் பரவத்தொடங்கின. அதை தொடர்ந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், பிரதமர் மோடி, 'மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் சூழ்நிலை, உலகளவில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், இந்தியா எப்போதும் தயார் நிலையில், ஒன்றுபட்டு , எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் நாடு ஒன்றுபட்டு பிரச்னையை

எதிர்கொண்டது போல, இன்றும் அதே மனநிலையுடன் செயல்பட வேண்டும்' என்று பார்லிமென்டில் பேசினார். இப்படி பேசியது, எந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இதையும் திரித்த ஸ்டாலின்:

'கோவிட் காலத்தைப் போல' என பிரதமர் பேசியதால், ஏற்கனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள், மேலும் சிரமத்துக்கு பீதிக்கும் உள்ளாகப் போகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர நடவடிக்கைகள் வாயிலாக உடனடியாக இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அதை செய்ய வேண்டிய ஒன்றிய பா.ஜ., அரசு, இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது.

பா.ஜ., ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேச மாட்டோம் என, தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறது. சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? கொரோனா காலத்தை ஞாபகப்படுத்தும் விதமாக கூறிய மோடி, தயாராக இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார். அப்படி தயாராக இருக்க வேண்டியது நீங்களா... மக்களா?

மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ., அரசு என்ன செய்கிறது? என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி. இவ்வாறு தனது எக்ஸ் வலைப்பதிவில் குறிப்பிட்டார். இதே போன்ற பதிவை மறுநாளும் வெளியிட்டார். முடிந்தவரை பிரச்னையை பெரிதாக்க தி.மு.க., முடிவு செய்திருக்கிறது.

இதற்கு பதில் சொல்ல வேண்டிய பா.ஜ., வழக்கம் போல், அது வேறு யாருக்கோ பிரச்னை என்ற பாணியில் நடந்துகொண்டு இருப்பது, தி.மு.க.,வை மேலும் குஷிப்படுத்தி உள்ளது. இதை தி.மு.க., வெற்றிகரமாக பிரசாரம் செய்தால் பா.ஜ.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் கடும் வாயு பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது என, அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us