தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,வின் வன்கொடுமை பேச்சுகள்

 தி.மு.க.,வின் வன்கொடுமை பேச்சுகள்

 தி.மு.க.,வின் வன்கொடுமை பேச்சுகள்


UPDATED : மார் 25, 2026 11:34 AM

ADDED : மார் 25, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2026 11:34 AM ADDED : மார் 25, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.வெங்கடேசன்,

மாநிலத் துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,

தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஜாதிய வன்முறைகள், வன்கொடுமைகள், படுகொலைகள், ஆணவ படுகொலைகள் அதிகமாகவே நடக்க ஆரம்பிக்கும். ஜாதிய ஆதிக்க எள்ளல் பேச்சுகள், கிண்டல், அருவருப்பான பேச்சுகள் என, பட்டியல் சமூகத்தவரை நோக்கி கட்டுக்கடங்காமல் பேசப்படும்.

இப்பேச்சுகளுக்கு எதிராக தி.மு.க., என்றுமே கண்டனக்குரல் கொடுக்காது. தி.மு.க., அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது.

பொது தொகுதி


முன்பு ஒருமுறை 'தாழ்த்தப்பட்டவர்கள் பொது தொகுதியில் நிற்க ஆசைப்படலாமா?' என்று கூட்டணிக் கட்சியான வி.சி.,யிடம் கேட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பொது குளத்தில் பட்டியல் சமூகத்தவர் தண்ணீர் எடுக்கக் கூடாது, பொது தெருவில் நடக்கக் கூடாது என்ற மனநிலையில் உள்ள ஒருவர்தான் பொது தொகுதியில் பட்டியல் சமூகத்தவர் போட்டிப்போடக் கூடாது என்று பேச முடியும்.

தனித்தொகுதியில் மட்டும்தான் பட்டியல் சமூகத்தவர் நிற்க தகுதி பெற்றவர் என்று, தி.மு.க., இன்றுவரை நிரூபித்து வருகிறது. அதனால் தான் பெரம்பலுார் தொகுதி தனித்தொகுதியாக இருக்கும்போது, ஆ.ராஜாவை தேர்தலில் போட்டியிட அனுமதித்தவர்கள், அது பொதுத்தொகுதியாக மாறியவுடன் தனித்தொகுதியாக இருந்த நீலகிரிக்கு அவரை துரத்திவிட்டனர். அதாவது, எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் கூட, பட்டியல் சமூகத்தவர் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படக் கூடாது என்ற கருணாநிதியின் மனநிலையை முதல்வர் ஸ்டாலினும் கடைப்பிடிக்கிறார்.

அநாகரிக பேச்சுகள்


சென்னை அன்பகத்தில், 2020 பிப்ரவரி 14 அன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் பேசிய தி.மு.க.,வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, 'ஓப்பனா சொல்றேன், ஒரு ஹரிஜன் கூட மத்திய பிரதேசத்தில ஐகோர்ட் ஜட்ஜ் கிடையாது. தமிழ்நாட்டுல, கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். அதற்கு பிறகு, ஏழெட்டு ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்கள் ஜட்ஜாக இருந்தார்கள் என்றால், அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை' என்று பேசினார்.

இது போன்ற அநாகரிகப் பேச்சுகள் பட்டியல் சமூகத்தவரை மிக கேவலப்படுத்துவதும்; கொச்சைப்படுத்துவதும், மற்ற ஆதிக்க ஜாதிகளுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கக் கூடியதும் ஆகும். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இதற்காக ஆர்.எஸ். பாரதியை கண்டிக்கவில்லை; நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதே போல், இன்னொரு சம்பவம், 2020ல் நடைபெற்றது. தி.மு.க., - எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி ஆகிய நான்கு பேரும், தலைமை செயலகத்திற்கு சென்று, அப்போதைய தலைமை செயலரை சந்தித்து மனுக்களை அளித்து, வெளியில் வந்து பேட்டி கொடுத்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய தயாநிதி, 'தலைமை செயலர் எங்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தலைமைச் செயலர் எங்களை அவமதிப்பதற்கு' என்று பொதுவெளியில் கேள்வி கேட்டார்.

இதன் பொருள் என்ன?


தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கலாம் என்பதுதான். அப்போது அருகில் இருந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் எவரும் அதை கண்டிக்கவில்லை. அதன் பிறகு கூட தி.மு.க., சார்பிலோ, ஸ்டாலினோ அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஸ்டாலின் உட்பட தி.மு.க.,வில் இருக்கும் அத்தனை பேருடைய மனநிலையும் இதுதான்.

ஜாதிவெறி


கலப்பு திருமணம் தான் ஜாதியை ஒழிக்க ஒரே வழி என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார். ஆனால், தி.மு.க.,வில் ஒருவர் கூட இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 'நாங்கள் ஓட்டு கேட்போம். அதற்காக மற்ற ஜாதியினரிடத்தில் இருந்து பெண் எடுப்போமா அல்லது எங்கள் பெண்ணை கொடுப்போமா? அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று ஜாதிவெறியை அப்பட்டமாக பொதுக்கூட்டத்தில் பேசினார்.

நான் உயர்ஜாதி, மற்றவர்கள் கீழ்ஜாதி என்ற மனநிலையில் பேசப்பட்டது இப்பேச்சு. இது பற்றி தி.மு.க.,வின் தலைவர் ஸ்டாலின் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கருத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு கண்டனமும் இல்லை. இது போன்ற பேச்சுகள்தான் சமூகத்தில் பட்டியல் சமூகத்தவரை பற்றிய மோசமான பிம்பத்தை உருவாக்குகின்றன.

பேச்சுகள் என்ன செய்யும்?


ஜாதி ஆதிக்கம் புரையோடி கிடக்கின்ற இச்சமூகத்தில், திட்டமிட்டே தி.மு.க., நிர்வாகிகளும் அதன் தலைவர்களும் பேசிவருவது மற்ற ஆதிக்க ஜாதியினருக்கு மனபலத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

இதன் விளைவாக, மற்ற ஆதிக்க ஜாதியினரும் பட்டியல் சமூகத்தவரை மிக மோசமான வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி வருகின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற பேச்சுகள் அதிகரித்து இருக்கின்றன. இதை தடுக்க வேண்டுமானால் இதுபோன்று பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் தி.மு.க., ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது. நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு.

venkiambeth@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us