நாங்குநேரி அருகே இரட்டைக்கொலை; பெட்ரோல் குண்டு வீசி தப்பியது கும்பல்
நாங்குநேரி அருகே இரட்டைக்கொலை; பெட்ரோல் குண்டு வீசி தப்பியது கும்பல்
UPDATED : மார் 02, 2026 10:31 PM
ADDED : மார் 02, 2026 10:22 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே டூவீலர்களில் அரிவாள்களுடன் வந்த கும்பல் நடத்திய அரிவாள் வெட்டு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 டூ வீலர்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்தவர்களை சரமாரியாக வெட்டியதுடன், பெட்ரோல் குண்டுகளையும் வீசி அச்சுறுத்தினர். இந்த சம்பவத்தில் 9 பேருக்கு வெட்டு விழுந்தது. 2 பேர் இறந்த நிலையில், 2பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ஜான் (50) என்பவர் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தாக்குதல் நடத்திய கும்பல் பின்னர் கடம்போடு வாழ்வு கிராமத்திற்குச் சென்று அங்கும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் தலைமையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரட்டை கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

