ADDED : மே 28, 2026 05:08 AM

புதுடில்லி: நாடு முழுதும் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிகளவு தண்ணீரை பருகும்படி கேட்டுக்கொண்டார்.
தமிழகம், டில்லி, உ.பி., ஒடிஷா உட்பட நாடு முழுதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு நகரங்களில், 45 டிகிரி செல்ஷியசுக்கும் மேல் வெப்பம் பதிவாகி வெப்ப அலை வீசுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருமே பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட பதிவு:
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தால், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீரை உடன் எடுத்துச் செல்லுங்கள்; உடல் வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; அதிகளவு தண்ணீரை பருகுங்கள்.
அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி அல்லது கடுமையான சோர்வு போன்ற எந்தவொரு அசவுகரியத்தையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், வெப்ப வாதம் ஏற்படும். கோடை வெயிலால், குழந்தைகள், முதியவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இந்த கொளுத்தும் வெயிலில், விலங்குகளையும், பறவைகளையும் நாம் மறந்து விடக் கூடாது. நம் வீட்டு மொட்டை மாடிகள், பால்கனிகள், அலுவலகங்கள் வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து உயிரினங்களுக்கு உதவுவோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
