சத்தீஸ்கரில் நக்சலுடன் என்கவுன்டர்; பாதுகாப்புப் படையினர் 3 பேர் வீரமரணம்
சத்தீஸ்கரில் நக்சலுடன் என்கவுன்டர்; பாதுகாப்புப் படையினர் 3 பேர் வீரமரணம்
UPDATED : டிச 03, 2025 07:22 PM
ADDED : டிச 03, 2025 04:47 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தை ஒட்டியுள்ள கங்கலூர் பகுதியின் காட்டில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசார் உடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுக்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது வன பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர் மோனு வதாதி, காவலர் துகாரு கோண்டே உள்ளிட்ட 3 பேர் வீரமரணம் அடைந்ததுனர்.
அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால், அந்த பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சமீபத்திய நடவடிக்கையின் மூலம், இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டர்களில் நக்சலைட்டுகள் 269 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

