UPDATED : ஆக 07, 2026 10:35 PM
ADDED : ஆக 07, 2026 09:53 PM

ரோம் : கடும் வெப்ப அலையால் ஐரோப்பிய நாடுகள் தகிக்கின்றன. ஆஸ்திரியாவில் வெப்பநிலை புதிய சாதனை அளவை எட்டியுள்ளது.
ஐரோப்பாவில், கடும் வெப்ப அலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள நாடுகளின் வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளது. இதன் காரணமாக, சுகாதாரம், மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியின் தேசிய வெப்ப கண்காணிப்பு அமைப்பின் கீழ் உள்ள, 27 முக்கிய நகரங்களும், நடப்பாண்டில் முதன்முறையாக ஒரே நேரத்தில் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ரோம் நகரில் மக்களுக்காக நகர்ப்புற கடற்கரை மற்றும் மிஸ்ட் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரியாவில், 41.2 டிகிரி செல்ஷியசும், ஸ்லோவாக்கியாவில், 42.2 டிகிரி செல்ஷியசும் வெப்பம் பதிவாகி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளன. கடும் வறட்சியால் டான்யூப் நதியில் நீர்மட்டம் குறைந்து, நீர்மின் மற்றும் அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நதிகளின் நீர்மட்டம் குறைந்ததால், நீர்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் பால்கன் நாடுகளில் காட்டுத்தீ பரவி வருவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
