டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றிரண்டை மட்டும் ஏற்றது ஹமாஸ்
UPDATED : அக் 05, 2025 09:28 PM
ADDED : அக் 05, 2025 02:25 AM

காசா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி ஒப்பந்தத்தில், ஒரு சிலவற்றை மட்டும் ஏற்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. மீதமுள்ளவை குறித்து பேச்சு நடத்தலாம் என்று கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.
அவகாசம்
இப்போரை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்சங்கள் உள்ள அமைதி திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இதற்கு இஸ்ரேல் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து பதிலளிக்க ஹமாஸ் அமைப்புக்கு, நாளை மாலை 6:00 மணி வரை அவகாசம் அளிப்பதாக காலக்கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து, அமைதி திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் நேற்று தெரிவித்துள்ளது. மேலும், சில முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதி திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உயிருடன் மற்றும் இறந்த பிணைக் கைதிகள் அனைவரையும் ஒப்படைப்பதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
உடனடியாக, போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும், இஸ்ரேல் படைகள் காசாவில் இருந்து முழுதுமாக வாபஸ் பெறுவதற்கும் ஆதரவளித்துள்ளது. காசாவுக்கு உடனடி மனிதாபிமான உதவி மற்றும் மறு சீரமைப்பு முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அமைதி திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதை ஏற்கவில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரும் வரை ஆயுதங்களை கைவிட மாட்டோம் என, ஹமாஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பதில் ஹமாசுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என, டிரம்ப் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவுடன் காசா பகுதியின் நிர்வாகத்தை பாலஸ்தீன சுதந்திர அமைப்பிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமா ஸ் தெரிவித்துள்ளது.
பேச்சு
மேலும், வெளிநாட்டு மேற்பார்வை என்பதையும் ஹமாஸ் நிராகரித்துள்ளது. விரிவான பாலஸ்தீன தேசிய கட்டமைப்பில் ஹமாஸ் ஒரு பகுதியாக இருக்கும் எனக் கூறி, எதிர்கால ஆட்சியில் தனக்கான பங்கை விட்டுக்கொடுக்க மறுத்துள்ளது.சுருக்கமாக கூறுவ தென்றால், பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை நிறுத்தவும் ஹமாஸ் தயாராக உள்ளது.
ஆனால், ஆயுதங்களை கைவிடவும், காசாவின் அதிகாரத்தை முழுமையாக விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை. இந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, இறுதி ஒப்பந்தத்தை எட்ட மத்தியஸ்தர்கள் வாயிலாக மேலும் பேச்சு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'
ஒத்துழைப்பு அளிப்போம்
'
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பை இஸ்ரேல் அளிக்கும் என, இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.