வெறுப்பை தூண்டும் பேச்சு; திமுக மாஜி மீது பாய்ந்தது வழக்கு
வெறுப்பை தூண்டும் பேச்சு; திமுக மாஜி மீது பாய்ந்தது வழக்கு
ADDED : ஏப் 11, 2026 07:30 AM

பல்லடம்: 'ஓட்டு கேட்க வந்தால் செருப்பை கழற்றி அடியுங்கள்' என, பல்லடத்தில், தி.மு.க., முன்னாள் எம்.பி., பேசியதால், கொதிப்படைந்த பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர், அவரை கைது செய்ய வலியுறுத்தி போலீசில் புகார் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் செல்வராஜுக்கு ஆதரவு கேட்டு, முன்னாள் தி.மு.க., - எம்.பி., முகமது அப்துல்லா, நேற்று முன்தினம் இரவு, அறிவொளி நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., குறித்து விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
பா.ஜ., பல்லடம் வடக்கு ஒன்றிய தலைவர் நித்யா கூறியதாவது: அறிவொளி நகரில் தி.மு.க.,வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அக்கட்சியின் பேச்சாளர் முன்னாள் எம்.பி., முகமது அப்துல்லா, 'பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் ஓட்டு கேட்க வந்தால், செருப்பை கழற்றி அடியுங்கள்' என்று மிகவும் கீழ்த்தரமாக, மக்களிடையே கலவரத்தை துாண்டும் விதமாக பேசியுள்ளார்.
அவர் பேசிய காட்சிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகளும் வீடியோ பதிவு செய்துள்ளனர். எனவே, முகமது அப்துல்லாவை கைது செய்வதுடன், ஏற்பாடு செய்த தி.மு.க., வினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புகாரின்படி, கடுமையாக ஆத்திரமூட்டுவது, தேர்தல் நேரத்தில் செல்வாக்கை பெறுவதற்காக தேவையற்றதை பேசுவது மற்றும் பகை, வெறுப்பை துாண்டும் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ், முன்னாள் எம்.பி., முகமது அப்துல்லா மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
