ADDED : அக் 02, 2025 06:29 AM

சென்னை: தமிழகத்தின் வடமாவட்டங்களில், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, நேற்று காலை வலுப்பெற்றது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில், நாளை கரையை கடக்கும்.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும், வரும், 7ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில், இடி, மின்னலுடன் மழை பெய்யலாம். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், கடலுார் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யும்.
வரும், 4ம் தேதி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும். ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.