ADDED : நவ 09, 2025 06:41 AM

சென்னை: தமிழகத்தில், வரும் 12, 13 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில், 8 செ.மீ., மழை பதிவானது.
தற்போது, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 12ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 13ம் தேதி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், கன மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

