ADDED : ஜூன் 17, 2026 05:28 AM

சென்னை: 'தமிழகத்தில், நீலகிரி, திண்டுக்கல் உட்பட ஏழு மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் முதல், கேரள கடலோர பகுதிகள் வரை, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்று, அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
