UPDATED : அக் 19, 2025 11:47 AM
ADDED : அக் 19, 2025 08:45 AM

சென்னை: தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 137 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில், 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் 24ம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று, மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவோர், கவனமுடன் தங்களின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
30 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. திருநெல்வேலி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
அதிக மழைப்பொழிவு எங்கே?
தமிழகத்தில் இன்று காலை 8:30 மணி உடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
கோத்தகிரி 137
கோவிலங்குளம் 135
அருப்புக்கோட்டை 115
ராஜபாளையம் 110
சிவகாசி 110
கீழ்க்கோத்தகிரி 102
பர்லியார் 92
பந்தலூர் 90
பேரையூர் 89
கோடநாடு 88
காயல்பட்டினம் 81
வேம்பகோட்டை அணை 76
கெத்தை 76
அலக்கறை எஸ்டேட் 72
குன்னூர் 64
குந்தா பாலம் 64
ஸ்ரீவில்லிபுத்தூர் 60
தங்கச்சிமடம் 58
நிலக்கோட்டை 58
முதுகுளத்தூர் 57
கந்தர்வகோட்டை 47
வத்திராயிருப்பு 45
விழுப்புரம் 45
ஊட்டி44
ராமேஸ்வரம் 42
பாம்பன் 31
பல்லடம், திருப்பூர் - 32
திருப்பூர், கலெக்டர் அலுவலகம்- 6
விழுப்புரம்- 45
அன்னூர்- 62.40
பில்லூர் அணை- 45
சிறுவாணி அடிவாரம்- 35
வீடுகளுக்குள் புகுந்தது மழைநீர்!
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் பழனி கிருஷ்ணா அவென்யூவில் இன்று (அக் 19) அதிகாலை ஒரு மணி முதல் 3 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்தது.
வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அன்னூரில் வாழை, கரும்பு உள்ளிட்ட 100 ஏக்கர் தோட்டங்களில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதே போல், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே உள்ள தோணியாற்றில் நேற்று இரவு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கோவில் வளாகம் முழுவதும் நீரில் மூழ்கியது.
அங்கிருந்த மலைவாழ் மக்களின் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது வெள்ளம் குறைந்து இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் பஞ்சலிங்க அருவிக்கும் கோவிலுக்கும் அனுமதிக்கப்படவில்லை.