தலைவர்களின் விழாவிற்கு தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்றம் கருத்து
தலைவர்களின் விழாவிற்கு தடை விதிக்க முடியாது உயர்நீதிமன்றம் கருத்து
ADDED : செப் 10, 2025 01:39 AM

மதுரை : தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு தினம் உள்ளிட்ட சில தலைவர்களின் விழாக்களுக்கு தடை கோரிய வழக்கில், 'அரசு தரப்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க முடியாது,' என தெரிவித்து பைசல் செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
திருமங்கலம் சத்திய பிரியா தாக்கல் செய்த பொதுநல மனு: ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காக தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள், முத்தரையர் விழா, தீரன் சின்னமலை விழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, மருதுபாண்டியர் குரு பூஜை, மூக்கையாத்தேவர் விழாவையொட்டி கொண்டாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: சில விழாக்களை அரசே நடத்துகிறது. முற்றிலும் தடை விதிக்க முடியாது. தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அமைதியாக நடத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சக்திராவ்: 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கடந்த காலங்களில் மீறப்பட்டுள்ளது. போலீசாரின் வாகனங்களின் மீது ஏறி சிலர் ஆட்டம் போட்டனர். வழக்கு பதிவு செய்வதில்லை.
அஜ்மல்கான்: 2021 ல் 78 வழக்குகள், 2022 ல் 55, 2023 ல் 9, 2024 ல் 13 வழக்குகள் பதியப்பட்டன.
சக்திராவ்: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து 3 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க வேண்டும். தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்களில் அல்லாமல் அரசு பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.
நீதிபதிகள்: அரசால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கு தடை விதிக்க முடியாது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. மனுவை பரிசீலித்து உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.