UPDATED : செப் 24, 2025 10:28 PM
ADDED : செப் 24, 2025 08:16 PM

சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளருமான பீலா வெங்கடேசன் இன்று( செப்.,24) காலமானார். அவருக்கு வயது 56.
கோவிட் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார். இதன் பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
யார் இவர்
வெங்டேசன் -- ராணி தம்பதிகளுக்கு களாக 1969ம் ஆண்டு பிறந்தவர் பீலா. தந்தை வெங்கடேசன், போலீஸ் டி.ஜி.பி.,யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பரிய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டசபைத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனவர்.
டாக்டர்.. பின் ஐ.ஏ.எஸ்.,:
பீலா, சென்னையில் படித்து, வளர்ந்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராஜேஷ்தாஸை காதலித்து 1992ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின், ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
பீலா 1997ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஆனார். முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர் ஒதுக்கப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரியான கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை மேற்கோள்காட்டி, 2000-ம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை தற்காலிகமாக மாற்றிக்கொண்டார். பின்னர், 2003-ம் ஆண்டு பீகாரிலிருந்து பிரிந்து புதிதாக உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின் மத்திய அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம், மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார். நீண்ட போராட்டத்துக்குப் பின், மீண்டும் தமிழகம் கேடர், இவருக்குக் கிடைத்தது.
தமிழகத்தில் செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக, 2019 பிப்., மாதம் பொறுப்பேற்றார். 2020 ல் வணிக வரித்துறைக்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு, தற்போது கடைசியாக எரிசக்திதுறை முதன்மை செயலாளராக பணியாற்றினார்.
பெயர் மாற்றம்
திருமணத்துக்கு பிறகு பீலா ராஜேஷ் என அவர் அழைக்கப்பட்டார். ஆனால், முன்னாள் டிஜிபியான ராஜேஷ்தாஸ் பாலியல் புகாரில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், அவர் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டார். அதற்கு முன்னர் கணவரை விவாகரத்து செய்தார்.
பீலா வெங்கடேசன் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவர்னர் ரவி
பீலா வெங்கடேசனின் அகால மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அர்ப்பணிப்புள்ள அதிகாரியான அவரது தலைமைத்துவமும், கூர்மையான நிர்வாகத் திறன்களும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது அர்ப்பணிப்பு மூலம் சுகாதாரம் மற்றும் அரசு நிர்வாகத்தில் நீடித்த மரபை விட்டுச் செல்கின்றன. அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
அடிப்படையில் மருத்துவரான பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் பணிக்கு தேர்வாகி, பல்வேறு முக்கியத் துறைகளில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர். மே லும் பல பெரும் பொறுப்புகளில்பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கலில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி மற்றும் தலைவர்கள், அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.