ADDED : நவ 21, 2025 01:14 PM

சென்னை: சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ மற்றும் பெயரை வர்த்தக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவர் சுமார் 1,000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். இவரது தரப்பில் சோனி, ஸ்பாட்டிபை, உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் யுடியுப் சேனல்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது
அந்த மனுவில், பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் போன்றவை தன்னுடைய போட்டோ, பெயர் மற்றும் குரலை வியாபார ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர்.
தன்னை அடையாளப்படுத்தும் போட்டோ, பெயர், இசைஞானி என்ற பட்டப்பெயர், குரல் உள்ளிட்ட எதையும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட தன்னுடைய போட்டோக்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தன்னுடைய போட்டோவை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியுப் போன்ற சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோ, பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

