வரி விதிப்பு குறித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; தாக்கத்தை ஆராய்கிறது மத்திய அரசு
வரி விதிப்பு குறித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; தாக்கத்தை ஆராய்கிறது மத்திய அரசு
ADDED : பிப் 21, 2026 06:10 PM

புதுடில்லி: டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதன் தாக்கத்தை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் இருந்த அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பல்வேறு பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் பரஸ்பரம் வரிவிதிப்பை அறிவித்து, அதை அமல்படுத்தினார். ஏற்றுமதி-இறக்குமதிக்கு இடையேயான பற்றாக்குறையை கையாள இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார்.
பரஸ்பரம் வரிவிதிப்புக்கு உலக நாடுகள் ஒரு பக்கம் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, வணிகர்கள் உள்ளிட்ட பலர் வழக்குகளை தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொண்ட அமர்வு, டிரம்பின் வரிவிதிப்பானது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்ற அதிபர் டிரம்ப், அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீதம் வரிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அறிவித்தார். அவரின் அறிவிப்பால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் எழுச்சி அடைந்தன.
இந் நிலையில், வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதன் தாக்கத்தை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி உள்ளதாவது;
அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதிபர் டிரம்ப் நிருபர்கள் சந்திப்பையும் கண்டோம். அமெரிக்க நிர்வாகம் சில நடவடிக்கைகளை அறிவித்து இருக்கிறது. அதன் முன்னேற்றங்கள், தாக்கங்கள் மற்றும் அதன் சாத்தியங்களை நாங்கள் உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

