இந்தியா டூ பூடான் ரயில் சேவை: ரூ.4,033 கோடியில் பாதை அமைக்க திட்டம்
இந்தியா டூ பூடான் ரயில் சேவை: ரூ.4,033 கோடியில் பாதை அமைக்க திட்டம்
ADDED : செப் 29, 2025 05:11 PM

புதுடில்லி: இந்தியா-பூடான் நாடுகளுக்கு இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து அறிவித்தார்.
இந்தியா - பூடான் இடையே தற்போது ரயில் இணைப்பு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே ரயில் சேவை ஏற்படுத்தும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூடானில் இருந்து இந்தியாவின் இரு நகரங்களுக்கு ரயில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
அசாமின் கோக்ராசார் -பூடான் நாட்டின் கெலபு ஆகிய நகரங்களுக்கும், மேற்கு வங்கத்தின் பனாரத் - பூடான் நாட்டின் சம்சே நகரங்களுக்கும் ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 89 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை 4,033 கோடி ரூபாயில் அமைய உள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: நமது இரு நாடுகளுக்கும் இடையே ரயில் இணைப்பை ஏற்படுத்துவதில், மிகப்பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா, பூடான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு கலாசாரம், வளர்ச்சி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பூடானுக்கு விஜயம் செய்தபோது, அவருக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான 'ஆர்டர் ஆப் தி ட்ருக் யால்போ' வழங்கப்பட்டது.
பூடான் அமைச்சர்களும், பிரதமரும் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்தியா பூடானுக்கு அதிகமான உதவிகளை வழங்கி வரும் முக்கிய நாடாக இருந்து வருகிறது. நவீனமயமாக்கலில், குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரயில் சேவை முக்கியம்
இது தொடர்பாக நிருபர்களிடம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இந்தியா-பூடான் ரயில்வே திட்டம், பூடானில் உள்ள கெலபு மற்றும் சம்சே ஆகிய இரண்டு முக்கிய நகரங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோக்ராசார் ரயில் பாதை திட்டம் 4 ஆண்டுகளிலும், பனாரத் ரயில் பாதை 3 ஆண்டுகளிலும் அமைக்கப்படும்.
இந்த இணைப்பின் மூலம் இந்தியாவின் ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் ரயில் பாதையுடன் பூடான் இணைக்கப்படும். பூடான் பொருளாதார வளர்ச்சி அடையவும், அந்நாட்டு மக்கள் உடனான உறவை வலுப்படுத்தவும் ரயில் சேவை முக்கியமானதாகும். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.