ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்; இந்தியாவில் எரிபொருள் விலை குறையுமா என எதிர்பார்ப்பு
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்; இந்தியாவில் எரிபொருள் விலை குறையுமா என எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 18, 2026 08:36 PM

புதுடில்லி: ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தால், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த செய்தி வெளியானதும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டது. அதனால், பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டில் சில்லரை எரிபொருள் விலை என்பது கச்சா எண்ணெயை தாண்டி பல காரணிகளை உள்ளடக்கியதாகும். சுத்திகரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள், மாநில வரிகள், மத்திய கலால் வரிகளை சார்ந்துள்ளன.
இந்திய எண்ணெய் நிறுவனங்களை பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கிறதா அல்லது மீண்டும் ஏறுமுகம் காணுகிறதா என்பதை பொறுத்தே மாற்றங்களை மேற்கொள்கின்றன. அந்த வகையில் பார்க்கும்போது, எரிபொருள் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கு காரணம், ஈரான் - அமெரிக்கா இடையே தற்போது ஏற்பட்டுள்ளது இடைக்கால ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்புக்கும் நிரந்தர தீர்வை எட்ட 60 நாள் அவகாசம் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டால், எண்ணெய் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆகையால், நாளை காலையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விடும் என எதிர்பார்க்க முடியாது என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
