ADDED : ஜூன் 05, 2026 05:40 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 9 மாவட்டங்களில், அதிகாரிகள் துணையுடன், கல் குவாரிகளில், அரசியல் புள்ளிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த, வழக்கறிஞர் வாசுதேவன், முதல்வரின் தனிப் பிரிவுக்கு, ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், கருங்கல் குவாரிகளில் அபரிமிதமான அளவுக்கு, முறைகேடுகள் நடந்து உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள், குத்தகை எடுத்த குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கரூர், மதுரை, துாத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில், எட்டு இடங்களில், முன்னாள் அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக, கருங்கற்களை வெட்டி கடத்தி உள்ளனர். இதற்கு, கனிமவளத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து உள்ளனர்.
முறைகேடுகள் நடந்த குவாரிகளுக்கு, உரிமம் அளித்த அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், 2022ல் உத்தரவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போதாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'குவாரி முறைகேடுகள் தொடர்பான அனைத்து புகார்களும், ஆய்வில் உள்ளன. இதில் உள்ள விபரங்கள் அடிப்படையிலும், கள ஆய்வு பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன' என் றார்.
