மீண்டும் பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பியது ஹமாஸ்…: இஸ்ரேல் கொந்தளிப்பு
மீண்டும் பிணைக்கைதிகளின் உடல்களை மாற்றி அனுப்பியது ஹமாஸ்…: இஸ்ரேல் கொந்தளிப்பு
UPDATED : நவ 01, 2025 10:19 PM
ADDED : நவ 01, 2025 10:18 PM

ஜெருசலேம்: பிணைக்கைதிகளில் 3 பேரின் உடல்களை ஹமாஸ் மாற்றி அனுப்பியதற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்
மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர்
டிரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்கா
முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும்
ஒப்புதல் அளித்துள்ளன.
பிணைக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர்.
மேலும், ஹமாஸிடம் இருக்கும் பிணைக்கைதிகளின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவை
சங்கத்தின் மூலம் இஸ்ரேல் பெற்று வருகிறது. மொத்தம் 28 பிணைக்கைதிகளின்
உடல்களில், இதுவரையில் 15 பேரின் சடலங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
உடல்களை
பெற்ற இஸ்ரேல், சடலங்களை தடயவியல் சோதனை செய்து, அடையாளம் கண்டு வருகிறது.
இப்படியிருக்கையில் பிணைக்கைதிகளின் உடல்களுக்கு பதிலாக வேறு உடல்களை
ஹமாஸ் அனுப்பி வருவதையும் கண்டறிந்து, இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் தாக்குதலை நடத்துவோம் என்றும் எச்சரிக்கை
விடுத்தது.
இதையடுத்து, மத்தியஸ்தர் நாடுகளின் உதவியுடன் பிணைக்கைதிகளை சடலங்களை ஹமாஸ் தேடி ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த
நிலையில், ஹமாஸ் படையினால் ஒப்படைக்கப்பட்ட உடல்களில் 3 உடல்கள் தங்கள்
நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிறைபிடித்துச் செல்லப்பட்ட நபர்களின் அடையாளங்களுடன், இந்த உடல்கள்
பொருந்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

