தொடர்ந்து போராடுங்கள்; உதவி வருகிறது: ஈரான் போராட்டக்காரர்களுக்கு டிரம்ப் அழைப்பு
தொடர்ந்து போராடுங்கள்; உதவி வருகிறது: ஈரான் போராட்டக்காரர்களுக்கு டிரம்ப் அழைப்பு
ADDED : ஜன 13, 2026 10:40 PM

வாஷிங்டன்: '' ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். உதவி வந்து கொண்டுள்ளது,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நீடித்து வருகிறது. இதில் 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளதாக ஈரான் ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஈரானுக்கு ஆதரவாக உள்ள நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டுகிறார்.
இதனிடையே டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் உடன், தொடர்பில் உள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாசி கூறியுள்ளார். அனைத்து தொலைத்தொடர்பு வழிகளும் திறந்தநிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது : ஈரான் தேசபக்தர்கள் தொடர்ந்து போராடுங்கள். உங்கள் அமைப்புகளை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கொலைகாரர்கள் மற்றும் மோசமாக விமர்சிப்பவர்களின் பெயர்களை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். உங்களுக்கான உதவி வந்து கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

