வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: ஐ.நா.வுக்கு வெளியே முகமது யூனுஸ்க்கு எதிராக போராட்டம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: ஐ.நா.வுக்கு வெளியே முகமது யூனுஸ்க்கு எதிராக போராட்டம்
ADDED : செப் 27, 2025 08:57 AM

நியூயார்க்: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாக கூறி, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே வங்கதேச புலம்பெயர்ந்தோர் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டம் வரும் செப்., 29ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்த சூழலில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியே வங்கதேச புலம்பெயர்ந்தோர் ஒன்றுகூடி, வங்கதேசத்தின் இடைக்கால அரசின் முகமது யூனுஸுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 2024ம் ஆண்டு பதவி விலகி பிறகு, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள், முகமது யூனுஸ் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்லுமாறு கூச்சலிட்டனர். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலைமை மோசமடைந்து
வருகிறது.
ஆகஸ்ட் 5ம் தேதி, 2024ம் ஆண்டு முதல் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து, பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து மதங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முகமது யூனுஸ் அதிகாரத்தை விட்டுவிட்டு செல்ல வேண்டும். வங்க தேசத்தில் தேர்தல் நடத்த வேண்டும்.
வங்கதேசத்தை தாலிபான் நாடாக, பயங்கரவாத நாடாக முகமது யூனுஸ் மாற்றி வருகிறார். பேரணியின் நோக்கம் மிகவும் எளிமையானது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேசத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் ஐநாவுக்கு வெளியே பரபரப்பான சூழல் நிலவியது.