லார்ட்ஸ் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய பெண்கள் அணி
லார்ட்ஸ் டெஸ்ட்: வரலாற்று வெற்றியை நோக்கி இந்திய பெண்கள் அணி
ADDED : ஜூலை 12, 2026 11:34 PM

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பெண்கள் அணி நிர்ணயித்த 457 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்து, 327 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்டில் விளையாடுகிறது. இப்போட்டி லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 285, இங்கிலாந்து 170 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 154/1 ரன் எடுத்திருந்தது. ஸ்மிருதி (69), யஸ்திகா (39) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று, 3ம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது, லாரன் பெல் பந்தில் ஸ்மிருதி மந்தனா (70) அவுட்டானார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3) ஏமாற்றினார். சோபி எக்லெஸ்டோன் 'சுழலில்' கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (16), தீப்தி சர்மா (10) சிக்கினர். அபாரமாக ஆடிய யஸ்திகா பாட்யா, 145 பந்தில் சதத்தை எட்டினார்.
லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்டில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் யஸ்திகா. இவர், 158 பந்தில் 113 ரன் (14X4) எடுத்து அவுட்டானார். தொடர்ந்து அசத்திய எக்லெஸ்டோன் பந்தில் ஸ்னே ராணா (1) போல்டானார். பொறுப்பாக ஆடிய ரிச்சா கோஷ், 52 பந்தில் அரைசதம் விளாசினார்.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 341/7 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்து, 456 ரன் முன்னிலை பெற்றது. ரிச்சா கோஷ் (50), சயாலி (18) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட் கைப்பற்றினார்.
பின் 457 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. வரிசையாக விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து தத்தளித்து வருகிறது. அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் அரைசதம் எடுத்து (52 ரன்) அவுட்டாகாமல் களத்தில் உள்ளார்.
வெற்றி பெற இன்னும் 327 ரன்கள் உள்ள நிலையில், கைவசம் 4 விக்கெட் மட்டுமே உள்ளதால், இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை பெற்று சாதனை படைக்க உள்ளது.
