எச்1 பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி; அமெரிக்க பொருளாதார நிபுணர் திடுக் குற்றச்சாட்டு
எச்1 பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி; அமெரிக்க பொருளாதார நிபுணர் திடுக் குற்றச்சாட்டு
ADDED : நவ 26, 2025 04:55 PM

வாஷிங்டன்: எச்1 பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது என அமெரிக்க பொருளாதார நிபுணர் டேவ் பிராட் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக டேவ் பிராட் கூறியதாவது: இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு 220,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 85,000 எச்1பி விசாக்கள் மட்டுமே உச்சவரம்பு. அது நிர்ணயித்த வரம்பை விட 2.5 மடங்கு அதிகம். எச்1 பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது.
71 சதவீத எச்1 பி விசாக்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. 12 சதவீதம் பேர் மட்டுமே சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வருகின்றனர். அங்கே ஏதோ நடக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80-90 சதவீதம் போலியானவை.இந்தப் பிரச்னை அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு டேவ் பிராட் கூறினார்.
எச்1 பி விசா என்றால் என்ன?
ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே, அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும், 65 ஆயிரம் எச் 1 பி விசாக்களை வழங்கி வருகிறது. அத்துடன், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கும், இந்த வகை விசாக்கள், 20,000 வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம், 85,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன.
இந்த விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கியிருந்து பணியாற்றலாம். தேவையெனில், மேலும் மூன்றாண்டுகளுக்கு விசா காலத்தை நீட்டிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி, எச் 1 பி விசா பெற்ற, 13 லட்சம் வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

