ADDED : ஜன 05, 2026 06:45 AM

சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தெற்கு கேரள கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் பரவலாக வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

