ADDED : நவ 13, 2025 06:22 AM

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று, மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதிகளில் தலா, 6; மதுரை மாவட்டம் எழுமலையில், 5; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல், நாளை மறுநாள் வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 17 வாக்கில் மீண்டும் கன மழை துவங்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் பெரும்பாலான இடங்களில், இன்றும் நாளையும் அதிகபட்சமாக மணிக்கு, 55 கி.மீ., வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

