ADDED : ஜூலை 05, 2026 06:31 PM

புதுடில்லி: 3 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி நாளை (ஜூலை 6) முதல் 8ம் தேதி வரை இந்தோனேசியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
இப்பயணத்தின் போது, அவர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுடன் பேச்சு நடத்தவுள்ளார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
தொடர்ந்து, ஜகார்த்தாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகிறார். மேலும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பிரம்பானன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்ய இருக்கிறார்.
இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அவர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
