முருங்கை கீரை சூப், பாதாம் அல்வா ரஷ்ய அதிபர் புடினுக்கு சைவ விருந்து
முருங்கை கீரை சூப், பாதாம் அல்வா ரஷ்ய அதிபர் புடினுக்கு சைவ விருந்து
ADDED : டிச 07, 2025 12:23 AM

புதுடில்லி: இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் முழு சைவ விருந்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். அவருக்கு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின், இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த 4ம் தேதி டில்லி வந்தார். அவரை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்தார்.
அவருக்கு சைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது. அதன் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
முருங்கை இலை சூப் உடன் விருந்து துவங்கியது. ஆரம்ப உணவாக காஷ்மீர் பாணியில் தயாரிக்கப்பட்ட காளான் மற்றும் வால்நட் சட்னி, கருப்பு கொண்டைக்கடலை கெபாப் மற்றும் ரொட்டி. காய்கறிகள் அடங்கிய மோமோஸ் வைத்திருந்தனர்.
முக்கிய உணவாக, பனீர் ரோல் - குங்குமப்பூ சாஸ். பசலைகீரை, வெந்தய இலை கிரேவி, தயிர் சேர்க்கப்பட்ட உருளை தந்துாரி, ஊறுகாய் மசாலாவில் சமைத்த கத்திரிக்காய், பருப்பு கூட்டு, உலர் பழங்கள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட புலாவ் வழங்கப்பட்டது.
லச்சா பரோட்டா, மகாஸ் நான் உட்பட பல வகை ரொட்டிகள் விருந்தில் இடம்பெற்றிருந்தன.
பாதாம் அல்வா, குங்குமப்பூ பிஸ்தா சேர்க்கப்பட்ட குல்பி, பழங்கள், மாதுளை, ஆரஞ்சு, கேரட் போன்ற தனித்தனி ஜூஸ் வகைகள், முறுக்கு உள்ளிட்டவையும் அதிபர் புடினுக்கு பரிமாறப்பட்டன. அவர், இதில் சிலவற்றை ருசித்து சாப்பிட்டார்.

