பீஹார் புதிய முதல்வராக பா.ஜ.வின் சாம்ராட் சவுத்ரி தேர்வு; நாளை பதவியேற்பு
பீஹார் புதிய முதல்வராக பா.ஜ.வின் சாம்ராட் சவுத்ரி தேர்வு; நாளை பதவியேற்பு
UPDATED : ஏப் 14, 2026 04:33 PM
ADDED : ஏப் 14, 2026 03:52 PM

பாட்னா: ராஜ்யசபா எம்பியாக தேர்வான பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை கவர்னரிடம் அவர் சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து பாஜவின் சாம்ராட் சவுத்ரி புதிய முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.
பீஹாரில் கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ அடங்கிய தேஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம், விரைவில் பாஜ தலைமையில் ஆட்சி அமையும் என்ற பேச்சுகள் எழுந்தன.
இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் பீஹாரில் இருந்து நிதீஷ்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 10 ம் தேதி அவர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் சையத் அட் ஹஸ்னைனிடம் வழங்கினார்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் பீஹார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், இனிமேல் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளார்.
ஆதரவு
இதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் பதவியில் இருந்து நான் தற்போது விலகுவது என முடிவு செய்தோம். எனவே, இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டேன். இனிமேல், புதிய அரசு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும். புதிய அரசுக்கு எனது ஒத்துழைப்பும், ஆலோசனையும் இருக்கும்எனத் தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் முறைப்படி நாளை பதவி ஏற்க உள்ளார்.
நிதிஷ்குமார் அமைச்சரவையில் இவர் துணை முதல்வராக பதவி வகித்தார்.
