ADDED : டிச 21, 2025 09:27 PM

சென்னை: ''சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொரியல் எல்லாம். தேர்தலில் கூட்டு என்பதே இல்லை,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது.
இதில், சீமான் பேசியதாவது:
பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும். அதற்கான களமே அரசியல். அதனால்தான், சட்டசபை தேர்தலில், சரி பாதியாக 117 இடங்களை, பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வழங்குகிறது.
போட்டியிட, தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என, வருத்தம் இருக்கலாம். களத்தில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். கொடுக்காமல் விட்டால், விமர்சனங்கள் எழும். புறக்கணிக்கப்பட்ட சமூகங்களும் உள்ளன. அவர்களுக்கும், நாம் வாய்ப்பு வழங்குகிறோம்.
ஜாதி, நிறம், மதம் பார்த்து, யாரும் ஓட்டு போடக் கூடாது. ஜாதியாக நின்று, இங்கு யாரும் வென்றதில்லை. எந்த சமூகத்துடன், மற்ற சமூகம் இணைகிறதோ, அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
மக்களுக்கு நம் அரசியல் புரியும்போது, நம்மை கொண்டாடுவர். எனவே, நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை, புறம் தள்ளுங்கள்.
சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 234 வேட்பாளர்களையும், வரும் பிப்.21ல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். அனைவரும் இளைஞர்கள்தான்.
தேர்தலில் சமரசம் இல்லை. தேர்தல் கூட்டணி கிடையாது. சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொரியல் எல்லாம். சண்டை எல்லாம் தனித்துதான் போடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

