தேச பாதுகாப்பில் சமரசம் கூடாது: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
தேச பாதுகாப்பில் சமரசம் கூடாது: ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜூன் 11, 2026 04:07 AM

திருப்பூர்: ''தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் கூடாது. கடும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்'' என்று, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: இந்திய பயணியர் விமானங்களை குறி வைத்து பாகிஸ்தான் திட்டமிட்டு நடத்திய சதி தெரிய வந்துள்ளது.
பயணியர் விமானத்தில் நவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இருப்பிட குழப்பத்தை ஏற்படுத்தி, விபத்து ஏற்படுத்த பாக்., சதி செய்வது மனித குலத்துக்கு எதிரான செயல். கடந்த, இரு ஆண்டுகளாக, 2,354 சிக்னல் குழப்பங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு பாக். அரசின் துணை இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் விமான சேவையால், பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை சீர்குலைக்கும் சதியை மிகுந்த கண்காணிப்புடன் முறியடித்தாக வேண்டும். இந்த சதிகளுக்கு பின்னால் இருக்கும், பாக்., அரசை உலக அரங்கில் வெளிப்படுத்தி ஒடுக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கூடாது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் புலனாய்வு துறை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
வந்தே பாரத் ரயில் மீதான தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து வரும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு அவசரகால நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுகொள்கிறோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
