தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை; ராகுல்
தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை; ராகுல்
ADDED : டிச 10, 2025 08:17 PM

புதுடில்லி: தேர்தல் சீர்திருத்தம் குறித்து நாங்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் கூறி உள்ளார்.
பார்லிமெண்டில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். எதிர்க்கட்சிகளின் அனைத்து குற்றச்சாட்டுகள், கேள்விகளுக்கு அவர் நீண்ட விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் ஆவேசத்துடன் பதில் அளித்தார்.
அவையில் அமித்ஷா தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, மறுபுறம் எதிர்க்கட்சி எம்பிக்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்களை நோக்கி குரல் எழுப்பிய ஆளும்கட்சி எம்பிக்கள், உள்துறை அமைச்சரின் பதிலை கேட்காமல் சென்றால் எப்படி என்று கேள்வி எழுப்பினர். ஆனால் யாருடையே குரலையும் செவி மடுக்காமல் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் அவையில் இருந்து வெளியேறினர்.
பின்னர் பார்லி. வளாகத்தில் ராகுலிடம், அவையில் நிகழ்ந்த எஸ்ஐஆர் விவாதம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
எஸ்ஐஆர் குறித்து பார்லிமெண்டில் உள்துறை அமைச்சரின் பதில், பீதியடைந்த தற்காப்பு பதிலாக தான் உள்ளது. டிஜிட்டல் முறையில், படிக்கக் கூடிய, வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல்களை வெளியிட வேண்டும் என்றேன். அது பற்றி ஒரு வார்த்தை கூட பதிலில் இல்லை.
நாங்கள் கேட்ட கேள்விகளில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் கிடைத்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கட்டமைப்பு என்ன என்பதை அனைவருக்கும் கொடுங்கள் என்றேன். அதற்கும் பதில் இல்லை.
எனது நிருபர்கள் சந்திப்பில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவையில் அதை பற்றி எதையே பேசவில்லை. பல மாநிலங்களில் பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டுக்களை வைத்திருப்பது மற்றும் ஓட்டு போடுவது குறித்து எந்த பதிலும் இல்லை.
தேர்வு நடைமுறையில் இருந்து தலைமை நீதிபதியை நீக்குவது குறித்தும் எந்த பதிலும் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு விதிவிலக்கு வழங்குவது குறித்து அவர் அபத்தமான பதில் கூறியுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை வழங்காததற்கான சாக்குப்போக்கும் மிகவும் அபத்தமானது. நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஓட்டு திருட்டு மிகப்பெரிய துரோகம்.
இவ்வாறு ராகுல் பேட்டியளித்தார்.

