எதுவுமே செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தனர்: டிரம்ப் கிண்டல்
எதுவுமே செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்தனர்: டிரம்ப் கிண்டல்
ADDED : அக் 10, 2025 10:43 AM

நியூயார்க்: ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
இன்று 2025ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. விருதுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
நார்வே பார்லி.யால் நியமிக்கப்பட்டு உள்ள 5 பேர் கொண்ட குழுவானது பரிசீலனையில் உள்ளோரில் ஒருவரை விருதுக்கு உரியவராக தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கத்துடன், ரூ.10 கோடி பரிசுத்தொகையும் கிடைக்கும்.
எப்படியும் எனக்குத்தான் நோபல் பரிசு என்று கூறிக்கொண்டே இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப். முன்னாள் அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்துள்ளார். நோபல் பரிசு என்றால் என்ன என்றே தெரியாதவர் என்று கடும் வார்த்தைகளை பிரயோகப்படுத்தி உள்ளார்.
நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது;
அவர் (ஒபாமா) எதையுமே செய்யவில்லை. அவருக்கு பரிசு(நோபல்) கிடைத்திருக்கிறது. அந்த பரிசு என்னவென்று கூட அவருக்கு தெரியாது. நம் நாட்டை அழித்த அவரை தேர்ந்தெடுத்து, விருது கொடுத்தார்கள். அவர் ஒரு சிறந்த அதிபராக இருந்தது கிடையாது.
நான் 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை.
இவ்வாறு டிரம்ப் பேசினார். 8 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் கூறினாலும், அவரின் கூற்றை பல நாடுகள் மறுத்துள்ளன.