திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி
திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : நவ 01, 2025 02:51 PM

தஞ்சாவூர்: திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு பா.ஜ. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது : நாட்டில் எத்தனையோ மன்னர்கள் ஆண்டனர்.
அதில், அனைவரையும் மிஞ்சியவர் மாமன்னர் ராஜராஜசோழன். திறமையான ஆட்சி நடத்தினார். நமது பிரதமர் மோடி கங்கை கொண்டசோழபுரத்தில் ராஜேந்திரசோழனின் 1000 வது ஆண்டு விழாவில் பங்கேற்று ராஜேந்திரசோழனின் புகழை உலகெங்கிலும் பரப்பினார்.
தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வெளியே உள்ள மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை உள்ளே வைப்பது குறித்து பல தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிசீலனை செய்வோம். நெல் கொள்முதல் தாமதத்தால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும், முளைத்து வீணாகி வருகிறது. நெல் மூட்டைகளுடன் லாரிகள் பல நாட்கள் காத்திருக்கின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இது எதையும் பற்றி கவலைப்படாமல் முதல்வர், துணை முதல்வர் சினிமா பார்த்து வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டனர். இதுவரை சொன்னதை எதையும் தி.மு.க அரசு செய்யவில்லை. திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன. கவுண்டவுன் தொடங்கி விட்டது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

