வல்லபாய் படேல் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
வல்லபாய் படேல் நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
ADDED : அக் 30, 2025 10:35 PM

ஆமதாபாத்: குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். படேல் நினைவு நாணயம், தபால் தலையையும் வெளியிட்டார்.
நாளை சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றார். கேவாடியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் படேலை நினைவு கூரும் வகையில் 150 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால்தலையையும் வெளியிட்டார்.
தொடர்ந்து ஏக்தா நகரில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த அவர் கேவாடியா நகரில் சர்தார் வல்லபாய் படேலின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: கேவாடியாவில் சர்தார் வல்லபாய் குடும்பத்தினரை சந்தித்தேன். அவர்களுடன் கலந்துரையாடியதும், நாட்டிற்கு சர்தார் வல்லபாய் படேல் அளித்த பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

