48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை: இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் மோடி
48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை: இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் மோடி
UPDATED : மார் 03, 2026 11:26 PM
ADDED : மார் 03, 2026 10:03 PM

புதுடில்லி: ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் சூழலில் மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் ஓயவில்லை. நாள்தோறும் ஈரானுக்கு எதிரான தாக்குதலை இவ்விரு நாடுகளும் தீவிரப்படுத்தி வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந் நிலையில், போர் சூழலில் மேற்காசியாவில் தற்போதுள்ள நிலவரம் குறித்து 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையை நடத்தி இருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த 48 மணி நேரத்தில் அவர் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறார்.
பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நாடுகள்/தலைவர்கள் விவரங்கள்;
ஐக்கிய அரபு அமீரகம் - அதிபர் ஷேக் முகமதுபின் ஜாயித் அல் நாஹ்யான்
சவூதி அரேபியா - பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான்
கத்தார் - அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அர்தனி
ஓமன் - சுல்தான் ஹய்தான் பின் தாரிக்
பஹ்ரைன் - மன்னர் ஹமாத் பின் ஐசா அல் கலிபா
குவைத் - பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்காலித் அல்ஹமத் அல்முபாரக் அல்சபாஹ்
இஸ்ரேல் - பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஜோர்டான் - மன்னர் 2ம் அப்துல்லா
8 உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மேற்காசியாவில் தற்போதுள்ள நிலவரம், இந்தியர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். போர் சூழலுக்கு மத்தியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
எந்த நாடுகளுடன் என்ன ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரங்களையும் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அங்குள்ள இந்திய தூதரகங்களுடன் மத்திய அரசு தொடர்பில் இருந்து வருவது, குறிப்பிடத்தக்கது.

