கல்வி முறையை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
கல்வி முறையை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
UPDATED : மார் 09, 2026 02:12 PM
ADDED : மார் 09, 2026 11:16 AM

புதுடில்லி: நமது கல்வி முறையை தொடர்ந்து நவீனமயமாக்கி, தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. ஒலிம்பிக்கிற்கு நாடு மும்முரமாக தயாராகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இளம் விளையாட்டு வீரர்களை நாம் அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும்.
தொலைநோக்குப் பார்வை
அப்போது தான் இந்தியா சர்வதேச போட்டிகளில் உயரமாக பறக்க முடியும். சமீபத்திய ஆண்டுகளில், விளையாட்டு தேசிய வளர்ச்சியின் ஒரு முக்கியமாக கருதப்படுகிறது. நமது கல்வி முறையை, உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது என்ற தொலைநோக்குப் பார்வையில் அரசு செயல்படுகிறது.
எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு நாம் தயாராகி வருவதால், வாய்ப்புகள் இல்லை என கருதி எந்த பெண்களும் பின்வாங்கக்கூடாது என்பது மிக முக்கியம். ஏஐ மற்றும் ஆட்டோமேஷன், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது 2026ம் ஆண்டு பட்ஜெட்டின் அடிப்படை நோக்கமாகும். கடந்த பத்தாண்டுகளில், நாடு முழுவதும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மிகப்பெரிய பலம்
இன்று, கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு அப்பால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் புதிதாக ஏதாவது சாதிக்க விரும்புகிறார்கள். இளைஞர்களின் விடாமுயற்சி நமக்கு மிகப்பெரிய பலம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இதைப் பயன்படுத்திக் கொள்ள, நாம் நமது கல்வி முறையை தொடர்ந்து நவீனமயமாக்கி, தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கை இதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துள்ளது, இப்போது அதை நடை முறைப்படுத்துவது மிகவும் முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

