மாணவர்கள், இளைஞர்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்!
மாணவர்கள், இளைஞர்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்!
ADDED : ஆக 15, 2026 08:40 PM

- நமது சிறப்பு நிருபர் -
சுதந்திர தின உரையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள், செயற்கை நுண்ணறிவு பயிற்சி, விளையாட்டு திறமையை கண்டறியும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நாடு முழுவதும் தேர்வு முறைகேடு மற்றும் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளால் போராட்டங்கள் நடந்த நிலையில், இளைஞர்களை கவரும் வகையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்புகள் அமைந்தன. 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில், இளைஞர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஓராண்டில், 1 கோடி இளைஞர்களுக்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். இளம் தலைமுறையினரிடம் உள்ள விளையாட்டுத் திறமையை கண்டறிய, நாடு தழுவிய அளவில், 5 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களிடம் திறன் தேடல் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, 'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் எனவும் இளைஞர்கள், மாணவர்களிடம் வலியுறுத்தினார். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். சுதந்திர தின உரையில், 50 முறை இளைஞர்கள் என்ற வார்த்தையை பிரதமர் மோடி பயன்படுத்தினார்.
