பீஹார் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்
பீஹார் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்
ADDED : ஜூலை 05, 2026 04:17 PM

பாட்னா: பீஹார் சட்டசபை இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஹார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இந்த மாதம் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீஹாரில் கடந்தாண்டு நடந்த தேர்தலில் பாங்கிபூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜவின் தேசிய தலைவர் நிதின் நபின் 5வது முறையாக வெற்றி பெற்றார். தற்போது, இவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பாங்கிபூர் தொகுதி காலியனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி அறிவித்துள்ளார். கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், பாங்கிபூர் தொகுதி பல ஆண்டுகளாக பாஜவின் கோட்டையாக இருந்து வருகிறது. பாஜ இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும், அஜய் அலோக், நீல் ரத்தன் கோஷ் மற்றும் அஜீத் குமார் லாலி ஆகியோரது பெயர்களைப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
