பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
ADDED : நவ 11, 2025 11:15 AM

புதுடில்லி: பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணம் நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு தலைநகர் திம்புவில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார்.
இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார்.
பூடானின் முன்னாள் மன்னரும், தற்போதைய மன்னரின் தந்தையுமான ஜிக்மே வாங்சுக்கின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த பயணம் குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பூடான் நாட்டில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்.
பூடான் மன்னர் உடன் உறவை வலுப்படுத்துவது குறித்து நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இந்தப் பயணம் நமது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வருகை குறித்து பூடான் மன்னர் ஜிக்மே கேசர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிரதமர் மோடியை மீண்டும் வரவேற்க நான் மட்டுமல்ல.
மக்கள் அனைவரின் உற்சாகத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். 1000 மெகாவாட் நீர்மின் திட்டத்தை நாங்கள் தொடங்கி வைக்கப் போகிறோம். பிரதமர் மோடி ஒரு ஆன்மிக குரு. எனவே அவர் இந்தியாவின் தலைவராக, இந்தியாவின் அரசியல் தலைவராக இங்கு வருகிறார். இவ்வாறு ஜிக்மே கேசர் கூறினார்.

