ஊரக பணிகளை ஒப்பந்தம் எடுக்க மகளிர் குழுக்களுக்கு முன்னுரிமை
ஊரக பணிகளை ஒப்பந்தம் எடுக்க மகளிர் குழுக்களுக்கு முன்னுரிமை
ADDED : ஆக 16, 2026 07:19 PM

சென்னை: ஊரக வளர்ச்சி துறை பணிகளுக்கான ஒப்பந்தத்தில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள், ஊரக வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஊரக உள்ளாட்சிகளில், மகளிர்கள் ஒப்பந்தம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பதிவு செய்த, மகளிர் சுய உதவி குழுக்கள், தங்கள் பகுதியில் வரும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவான ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம். மொத்த பணிகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் பணிகளை செய்யலாம்.
ஒப்பந்த கட்டணத்தில் இருந்து, சுய உதவிக் குழுக்களுக்கு விலக்கு அளித்து, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல், பெண் ஒப்பந்ததாரர்களுக்கும் பதிவு கட்டண விலக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெண் ஒப்பந்ததாரர்களும், மகளிர் சுய உதவி குழுக்களும், தங்கள் பகுதியில் வரும், அரசு பணிகளுக்கான டெண்டர்களில் பங்கேற்று பயன் அடையலாம். மேலும் விபரங்களை, ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள, ஒப்பந்த பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் வழியே அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
